நீராவியடி பிரச்சினைக்கு சஜித்தின் அமைச்சே காரணம் – டக்ளஸ்!

doulosh
doulosh

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயம், கன்னியா போன்றவையில் உள்ள பிரச்சினையானது சஜித்தின் அமைச்சின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தொடர்பான பிரச்சனையாகவே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்பொழுதும் சரியான தீர்மானங்களை எடுப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வாடி வீட்டில் மக்கள் சந்திப்பில் இன்று (சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயம், கன்னியா போன்றவையில் உள்ள பிரச்சினையானது சஜித்தின் அமைச்சின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தியுள்ள பிரச்சினையாகவே உள்ளது.

மேலும் கல்முனை தமிழ் பிரதேச சபை பிரிவை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அத்தோடு தோட்டத் தொழிலாளர்களின் ஐம்பது ரூபாய் சம்பள உயர்வை கூட தற்போதைய ஆட்சியாளர்கள் இதுவரை செய்து முடிக்கவில்லை.

இந்நிலையில், தென்னிலங்கையின் நிலைவரப்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வேட்பாளர் ஆட்சிக்கு வருவார் என நம்புவதோடு தமிழ் மக்களும் எங்களை நம்பி இந்த வெற்றியில் பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நடக்கப்போவது நல்லதாகவெ நடக்கட்டும் என்று நான் சொல்லுவதன் அர்த்தம் பழிவாங்கும் உணர்வு இல்லாமல் நாம் இழந்ததை மீள பெற்றுக்கொண்டும் இருப்பதை பாதுகாத்துக்கொண்டும் முன்னோக்கி போக வேண்டும் என்பதேயாகும்” என்று தெரிவித்தார்.