சஹ்ரானுடனான காணொளி-ஹக்கீம் விளக்கம்

haheem 1
haheem 1

ஊடகங்களின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமையும் பயங்கரவாதி ஸஹ்ரானையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மறுத்துள்ளதுடன் வன்மையா கண்டித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று(Oct.19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இது தொடர்பாக தெரிவிக்கையில்

சில சிங்கள மொழி இலத்திரனியல் ஊடகங்களில் என்னையும் தீவிரவாதி ஸஹரானையும் தொடர்புபடுத்தி பழைய காணொளியொன்றை ஒளிபரப்பி, பொது மக்கள் மத்தியில் தவறான மனப்பதிவை ஏற்படுத்தக்கூடிய விஷமத்தனமான செய்தியொன்று பரப்பப்பட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, பின்கதவால் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தேசியப்பட்டியல் ஆசனமொன்றை பெற்றுக்கொண்ட பின்பு குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்து சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் இப்போது அதை தூக்கிப்பிடிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக இந்தக் கதையை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பேணி, சக வாழ்வுக்காக பாடுபட்டுவரும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எமது கட்சியின் உயரிய நோக்கங்களை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான கீழ்த்தரமான சதித்திட்டங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த போலிப் பிரசாரம் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இவற்றுக்கு முகம்கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒருபோதும் பின்நிற்காது என்றார்.