ராஜீவ்காந்தி கொலை வழக்கு-முருகன் சிறையில் செல்போன்-சலுகைகள் ரத்து

murugan
murugan

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் முருகனின் சிறை அறையிலிருந்து கைத்தொலைபேசி (செல்போன்) சிக்கியுள்ளமையினால் அவருக்கு வழங்கப்படும் சிறைச் சலுகைகளை ரத்து செய்ய ஆலோசித்து வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கணவன்-மனைவி இருவரும் சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் முருகன் தங்கியிருந்த அறையில் சிறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில், கைத்தொலைபேசி (செல்போன்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் கைத்தொலைபேசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஜெயிலர் ராஜேந்திரன் பாகாயம் பொலிஸில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது சிறையில் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முருகன் அறையில் 2 கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாத நிலையில் வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில் முருகன் அறையில் இருந்து 2வது முறையாக கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

முருகன் அறையில் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உத்தரவின்பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டால் சட்டத்தரணிகளை தவிர பார்வையாளர்களை அவர் சந்திக்க முடியாது. தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் கணவன்-மனைவி சந்திப்பும் ரத்து செய்யப்படும்.