ரணிலை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த மாதம் 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆணைக்கழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரினால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முறைப்பாடுகள் தொடர்பில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர்களான பீல்ட் மார்ஷல், சர்த் கொன்சேகா, ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது 11 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஆணைக்குழு இன்று மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளது.