காதலன் கூரிய ஆயுதத்தினால் காதலியை தாக்கி கொலை!

Murder
Murder

காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இளைஞன் ஒருவர் தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பின்னர் குறித்த நபர் விசம் அருந்தியுள்ள நிலையில், அவரை சிலாபம் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதி 22 வயதுடைய மாதம்பே-தும்மலசூரிய பகுதியில் வசித்து வந்துள்ளதோடு இவர் தொழிற்சாலையொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு, கொலை செய்த சந்தேக நபருக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்துள்ள நிலையில், இதற்கு யுவதியின் வீட்டில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த யுவதி அவரது மாமாவுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காயமடைந்த குறித்த யுவதி சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தும்மலசூரிய பகுதியில் வசித்து வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.