வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது!

வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (23) முதல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி அங்கிருந்து அவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து செல்லும் போது பொலிஸார் தடையேற்படுத்தினர்.

தொலைபேசி ஊரையாடலின் போது உரிய தீர்வு கிடைக்காதமையால் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.

கடந்த மார்ச் மாதம் தமக்கு புதிய வேலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் புதிய அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பதில் கிடைக்கும் வரை அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை அணிமித்து நின்றிருந்தவேளை, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் பிரதிநிதிகள் 8 பேருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது.

எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பு எழுத்து மூலம் வேண்டுமென கோரிய அவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மீண்டும் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக வந்து எதிர்ப்பை தொடர்ந்தனர்.