ஹோட்டலில் நடந்த நிகழ்வின் மூலம் கொரோனா பரவியதாக பாதுகாப்பு படையினர் சந்தேகம்!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் எவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு விருந்தில், குறித்த தொழிற்சாலையில் 39 நிர்வாகிகள் பங்கேற்றனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஹோட்டலுக்கு விமான நிறுவனங்களின் ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்காக வருவார்கள் என கூறப்படுகிறது.

அதன்படி, இந்த ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி மூலம் இந்த வைரஸ் பரவியதா என விசாரணை நடந்துவருகிறது.

மேலும் 26 ஆம் திகதி தொழிற்சாலையில் மற்றொரு விருந்து நடைபெற்றது, இதில் ஒரு பிரபலமான இசைக்குழுவும் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இந்த இசைக் குழுவின் 13 உறுப்பினர்கள் தொழிற்சாலைக்குள் வந்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த இசைக்குழுவினர் மூலம் வைரஸ் பரவியதா என்ற மற்றொரு சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் ஆராய முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.