20 ஆவது திருத்தத்தில் காணப்படும் சில விடயங்கள், மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சி தெரிவித்துள்ளது.
பிவிதுரு ஹெல உருமய கட்சியின் செயலாளர் உபுல் விஜேசேகரவினால் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
தமது கட்சி, 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு என்ற போதிலும், சில பாரதூரமான விடயங்கள் மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
இதேவேளை, 20 ஆவது அரசியமைப்பு திருத்தம் குறித்து, சில தேரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளமை குறித்து ஜனாதிபதி விசேட கவனஞ் செலுத்த வேண்டும் என ஹெல பொது சவிய அமைப்பின் பிரதான அனுநாயக்கர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டமூலம், எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், சில தேரர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, ஜனநாயக நாடொன்றின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசேட கவனஞ் செலுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.