நாட்டையே மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா தொற்றினை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொரோனா தொடர்பான விவாதம் இன்று (23) நடைபெற்ற நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கைப் பொறுத்தவரையில் கடல் வழியாகவும் கொறோனா பரவும் அபாயம் காணப்படுகின்றமையால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்றின் தேவை வடக்கிலே ஏற்பட்டுள்ளமையினால் அது தொடர்பாக சுகாதார அமைச்சர்; கவனத்தில் கொள்வார் எனவும் தெரிவித்தார்.
கொரோனா தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில் ‘இந்தியாவிலிருந்து எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களுடன் எவ்விதமான தொடர்புகளையும் வைத்திருக்கக்கூடாது என எமது கடற்றொழிலாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம்.
அதுமட்டுமல்லாது அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகின்ற ஒரு சில கடற்றொழில் முறைமைகளையும் தற்காலிகமாகத் தடை செய்துள்ளோம்.
எனினும், தற்போது நாட்டில் மீன் அறுவடைகள் அதிகமான காலம் என்பதால், கடற்றொழிலாளர்களை பாதிப்படையவிடாமல் அவர்களது அறுவடைகளை எமது மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோருக்கு இலகுவாக நியாய விலையிலும் கிடைக்கச் செய்வதற்குமான ஏற்பாடுகளையும் களஞ்சியப்படுத்தும் வசதிகளையும் முன்னெடுத்து வருகின்றோம்’ என்று தெரிவித்தார்.