மலையக ஆசிரியர் உதவியார்கள் சிலருக்கான நிரந்தர நியமன கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
419 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதில் நீண்டகாலமாக தாமதம் நிலவியது.
இதுதொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுநருடன் அண்மையில் கலந்துரையாடியிருந்தார்.
இந்தநிலையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் கொரோனா பரவல் காரணமாக ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையில் இன்றைய தினம் சில ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஏனைய ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் அஞ்சல் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.