நேற்றையதினம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில்,அவர்களுக்கு கொரொனா தொற்று இருந்தமை உறுதியானதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவருக்கும் கொழும்பு 2 ஐச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவருக்குமே இவ்வாறு இறப்பின் பின்னர்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் இருவரும் மரணிப்பதற்கு முன்னர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த 19 வயதான இளைஞர், பிறந்தது முதலே விசேட தேவையுடையவராக இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இதேநேரம் கொரோனா தொற்றால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்,ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.