நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று (Nov.08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘விதுலி புராணய’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மின்சார சபையில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய நெருக்கடி குறித்த பொறுப்பில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு விலகிக்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேநேரம் நீர்வழங்கல், பெற்றோலியம் மற்றும் இலங்கை விமான சேவை ஆகிய நிறுவனங்களிலும் இடம்பெறும் முறைக்கேடுகள் நாட்டை பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது இந்த நிறுவனங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
மின்சாரம் தொடர்பான ஆய்வாளரும் விரிவான அனுபவம் வாய்ந்தவருமான ரூபன் விக்ரமஆராச்சியினால் ‘விதுலி புராணய’ நூல் எழுதப்பட்டுள்ளதுடன், வரலாற்று காலம் முதல் இதுவரையில் இலங்கையிலும் உலகிலும் இடம்பெற்ற மின்சாரம் தொடர்பான முக்கிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நூலின் முதற் பிரதி ரூபன் விக்ரம ஆராச்சியினால் ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டது
கலாநிதி சரத் அமுனுகம, ரவி கருணாநாயக்க ஆகியோரும் மின்சார துறையின் பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.