அரசாங்கத்தின் கவனயீனத்தின் பிரதிபலனே கொரோனா வைரஸின் இரண்டாம் அலை குற்றம் ஐக்கிய தேசியக் கட்சி!

tamilarul.net36
tamilarul.net36

தற்போதைய அரசாங்கத்தின் கவனயீனத்தின் பிரதிபலனே கொரோனா வைரஸின் இரண்டாம் அலை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், கொரோனா பரவலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது வைரசைக் கட்டுப்படுத்தி வெற்றிகண்டுவிட்டதாகக் காண்பிப்பதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்ட தாமதம் கடும் விசனமளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.