வடமாகாண கொ​​ரோனா ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல்!

2H5A5728 1
2H5A5728 1

வடமாகாணத்தில் கொ​​ரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (04-11-2020) காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, காவல்துறையினர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்,

இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள்,

நாம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முறைகளை தீர்மானிக்கவேண்டும். அத்துடன் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள் சுகாதார துறையினர், மற்றும் காவல்துறையினரை ஒன்றிணைத்து, கொ​​ரோனா சுகாதார வழிகாட்டல்களை முறைப்படி கடைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் முறை தொடர்பாக பொதுவான ஒரு திட்டத்தை தயாரிக்கும்படியும், அத்துடன் மாணவர்களிடையேயும் கொ​​ரோனா சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் பதிவு செய்யப்பட்ட குறித்த பேரூந்தின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டுமென கூறியதோடு, பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பேரூந்தின் இலக்கத்தை இலகுவாக குறித்து வைக்கும்படியும்தெரிவித்தார்.

கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்கள் பெருமளவு குறைவடைந்துள்ளதுடன் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளும் சட்டரீதியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை சிறந்தமுறையில் நடைமுறைப்படுத்திய காவல்துறையினருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மாவட்ட ரீதியாக டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் சட்டரீதியற்ற முறையில் நடைபெறும் மண்அகழ்வு, மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் உரிய சட்ட நடவடிகைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார்.