வவுனியா பூவரசங்குளம் காவல்துறையினரின் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் வீதி இரண்டாம் செங்கல்படை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள் மற்றும் முதிரைப்பலகைகள் என்பன பூவரசங்குளம் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
குறித்த பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் முதிரைமரம் மற்றும் பலகைகள் அறுக்கப்படுவதாக பூவரசங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று(06) மாலை அப்பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினரும், இரகசிய காவல்துறை புலனாய்வாளர்களும் இணைந்து குறித்த மரக்கடத்தல்காரர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 முதிரை மரக்குற்றிகளும் 7 இலட்சம் பெறுமதியான முதிரைப்பலகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
இக்கடத்தல் தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.