கொரோனா வைரஸ்சை கட்டுப்பாடுத்தும் நடவடிக்கை அரசாங்கத்திடம் இல்லை- சமன் ரத்னபிரிய

download 1 12
download 1 12

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து அரசாங்கத்திடம் எந்தவொரு கொள்கை திட்டமும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது. அண்மைய சில நாட்களில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் எந்தவொரு கொள்கை திட்டமும் கிடையாது.

வைரஸ் தொற்றானது நபர் ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவாமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை குறித்து சுகாதாரத் துறைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த மார்ச் மாதம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அப்போதைய தேவையாக காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இன மத பேதம் இவ்வாறான காரணிகளை முன்வைத்தே அரசாங்கம் தேர்தலில் வெற்றிபெற்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.