காரைநகர் இறங்குதுறையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

unnamed file
unnamed file

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் காரைநகர் – ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பாதை சேவையை தடங்கல் இல்லாமல் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி காரைநகர் இறங்குதுறையில் இன்று காலை பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு கடமை மற்றும் அத்தியாவசிய சேவை நிமித்தம் சென்று வரும் அலுவலர்களும் பொதுமக்களும் இப்பாதை சேவையூடாகவே பயணிக்கின்றனர்.

அண்மைக்காலமாக இப்பாதை சேவையில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு சேவை இடைநிறுத்தப்படுவதால் பயணிகள் அசௌகரியங்களுக்கு எதிர் நோக்குகின்றனர்.

இப்பாதை சேவையானது கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெருத்த அவலங்களுக்கு மத்தியில் படகு சேவை மூலம் ஊர்காவற்றுறைப் பிரதேசத்திற்குச் சென்று வருவதாகவும் காரைநகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே சீரான போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்குரிய மகஜரினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.