கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை கேலி செய்து, சமூகவலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்ட டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் கால்பந்து அணியின் மத்தியகள வீரர் டேல் அலிக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு 50,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு கற்கை ஒன்றை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், 24 வயதான டேல் அலி ஸ்னப்சாட்டில் வெளியிட்ட காணொளியில், கொரோனா வைரஸ் பற்றி கேலி செய்ததோடு அதனை ஆசிய மனிதனுடன் ஒப்பிட்டும் இருந்தார்.
இந்தநிலையில், அவரது தவறான செயற்பாட்டுக்காக இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் அவருக்கு அபராதத்துடன் கூடிய போட்டித் தடையை விதித்துள்ளது.
இதுகுறித்து அலி கூறுகையில், ‘எனது நடத்தையால் ஏற்பட்ட எந்த ஒரு பாதிப்புக்காகவும் நான் மன்னிப்புக்கோர விரும்புவதோடு, கால்பந்து சம்மேளனத்தின் முடிவுக்கு பொறுப்பேற்கிறேன்’ என கூறினார்.
கொவிட்-19 முடக்க நிலைக்கு பின்னர் ஆரம்பமாகும் இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் டொட்டன்ஹாம் அணி எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி தனது சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடட் அணியை எதிர்கொள்கின்றது. இந்த போட்டியில் டேல் அலி விளையாடமாட்டார்.