ஈரானில் மாரடைப்பால் இறந்த பின்னரும் குற்றவாளியான பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
சஹ்ரா இஸ்மாயில் என்ற இப்பெண்ணின் கணவர் ஒரு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிவந்திருந்தார்.
இந்நிலையில் தன்னையும் மகளை மோசமான முறையில் நடத்தியமைக்காக உளவுத் துறை அதிகாரியான தனது கணவரை சஹ்ரா கொலை செய்திருந்த நிலையில், அக்குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தண்டனை நிறைவேற்ற தூக்கில் இடுவதற்காக தூக்கு மேடைக்கு சஹ்ரா அழைத்துவரப்பட்டார். அதன்போது சஹ்ராவுக்கு முன்னால் 16 குற்றவாளிகள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வரிசையில் காத்திருந்தனர்.
இந்த குற்றவாளிகள் 16 பேரையும் ஒவ்வொருவராக தூக்கில் போடப்படும் கொடூரமான காட்சியை சஹ்ரா பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வை தன்னால் பார்க்க முடியாது என்று சஹ்ரா பலமுறை கூறியபோதிலும் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்த அதிர்ச்சியினால் சஹ்ராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளார். ஷரி ஆ சட்டத்தின் படி கண்ணுக்கு கண் பழிவாங்கும் முறை ஈரானில் பின்பற்றப்படுகிறது.
ஈரானை பொருத்தவரை ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்து விட்டாலோ அல்லது கொலை செய்வதற்கு தூண்டினாலோ இறந்தவருக்காக பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக குற்றவாளி சட்டப்படி தூக்கில் இடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தூக்குக் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் குற்றவாளி கதிரையொன்றின் மேல் நிறுத்தி வைக்கப்படுவார்.
பாதிக்கப்பட்டவர் அல்லது உயிரிழந்தவரின் உறவினர்கள் எவராவது அந்த நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டும. அவர்கள் அவ்வாறு செய்தால் தான் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அதுமட்டுமல்லாது இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிம்மதி மற்றும் நீதி கிடைத்ததாக பொருள் என்பது அந்நாட்டின் சட்டமாக உள்ளது.
எனினும், ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்த சஹ்ராவால் அவரது கணவரின் உறவினர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. இருந்தாலும் இறந்து போனவரின் உடலை தூக்கில் தொங்கவிட சஹ்ரா நிற்க வைக்கப்பட்டுள்ள நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டுமென அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, சஹ்ராவின் இறந்த உடல் தூக்கிலிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.