தன்னை வன்புணர முயன்ற நபரை தற்காப்புக்காக கொலைசெய்த பெண் விடுதலை!

image1400747336 23789 PlaceID 0 s660x390
image1400747336 23789 PlaceID 0 s660x390

தமிழகத்தின், திருவள்ளூர் பகுதியில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரொருவரை கொலை செய்த பெண் ஒருவர் காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்பெண், தற்காப்புக்காக குறித்த நபரை தாக்கிக் கொலை செய்ததாக விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பண்ணையொன்றில் தங்கி பணிபுரிந்துவந்த தம்பதியினர் கடந்த 14ஆம் திகதி பணியை முடித்துக்கொண்டு இரவில் தனியாக உறங்கிக்கொண்டு இருந்தபோது, அவ்வழியில் சென்ற நபர் ஒருவர் குறித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்த பெண், அவரை பலமாக தாக்கியதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வாவிக்கரையொன்றில் இருந்து உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர் சந்தேகத்தில் மேற்படி தம்பதியினரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் தற்காப்புக்காக குறித்த நபரை கொலை செய்ததாக குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தம்பதியினரிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில், குறித்த பெண் தன்னை தற்காத்துக்கொள்வதற்காகவே அவரை அடித்து கொலை செய்ததாகவும், குறித்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளதாலும், அவர்களின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரினால் சந்தேகநபரான பெண்ணை விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்கள் கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.