மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் மற்றும் சிரியா நாடுகள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் மற்றொரு பேரழிவின் விளிம்பில் உள்ளன.
பிராந்தியத்தில் பணிபுரியும் 13 உதவி குழுக்கள், சிரியா மற்றும் ஈராக்கில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீர், உணவு மற்றும் மின்சாரம் ஆகியவற்றை இழந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் உருவாகும் உடனடி நீர் நெருக்கடியை சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகரித்து வரும் வெப்பநிலை, குறைந்த அளவு மழைப்பொழிவு மற்றும் வறட்சி இப்பகுதி முழுவதும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன.
சிரியா தற்போது 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது.
“மில்லியன் கணக்கான சிரியர்கள் மற்றும் ஈராக்கியர்களுக்கான நீர் மற்றும் உணவு உற்பத்தியின் மொத்த சரிவு உடனடியாக உள்ளது” என்று நோர்வே அகதிகள் கவுன்சிலின் பிராந்திய பணிப்பாளர் கார்ஸ்டன் ஹான்சன் கூறினார்.
“நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் இன்னும் பலர் சிரியாவில் உயிருக்கு தப்பி ஓடுகின்றனர், விரிவடையும் நீர் நெருக்கடி விரைவில் முன்னோடியில்லாத பேரழிவாக மாறும் மேலும் இடம்பெயர்வுக்கு தள்ளும்” என்று அவர் மேலும் கூறினார்.