சீனாவில் உள்ள நகரம் ஒன்று முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சியேன் என்ற நகரமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நகரில் நேற்றைய தினம் 52 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், அவர்களில் எவறேனும் ஒமைக்ரொன் கொவிட் திரிபினால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை இந்த நகரம் முடக்கப்பட்டுள்ளது.
சியேன் நகரில் சுமார் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றார்கள் என்பதுடன், இந்த முடக்க நிலை காரணமாக அவர்கள் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சியேன் நகரில் உள்ள குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சியேன் நகரில் உள்ள அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.