இந்திய தாய் ஒருவர் மரணித்த சம்பவத்தை அடுத்து, போர்த்துக்கலின் சுகாதார அமைச்சர் மர்டா டெமீடோ பதவி விலகியுள்ளார்.
போர்த்துக்கலுக்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் லிஸ்பனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. குறித்த குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், அந்த குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக, தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை வசதிகள் இல்லை என்பதால், அவர்களை அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தாயும், குழந்தையும், வேறொரு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், தாயின் உடல்நிலை பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் குறித்த தாய் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முறையான மருத்துவ சேவையை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து நிர்வாக ரீதியாக நடந்த தவறுக்கு பொறுப்பேற்று போர்த்துக்கலின் சுகாதார அமைச்சர் மர்டா டெமீடோ பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை போர்த்துக்கல் பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படும் வரை, மர்டா டெமீடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.