ஈராக்கில் உள்ள படைத்தளங்கள் மீது ஈரான் கடந்த வாரம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக்கில் உள்ள அல்-ஆசாத் விமானப்படைத் தளத்தை 17 ஏவுகணைகளும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகளும் தாக்கியதாக கூறிய ஈரான், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தெரிவித்தது.
இந்நிலையில் தங்கள் படை தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியது. தங்கள் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிபர் டிரம்பும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போரிடும் அமெரிக்கா தலைமையிலான இராணுவ கூட்டுப்படை வெளியிட்ட அறிக்கையில் 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
குண்டுகள் வெடித்தபிறகு பாதிக்கப்பட்ட பல வீரர்கள், ஜெர்மனிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் சேருவதற்கான உடற்தகுதி பெற்றதும், ஈராக்கிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.