இத்தாலியில் ஒரே நாளில் 683; ஸ்பெயினில் 655 பேர் பலி!

12 1
12 1

கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேரும் ஸ்பெயினில் 655 பேரும் பலியாகி உள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் அதிகபட்சமாக ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 655 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

ஸ்பெயினில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,089 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளைவிட அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் அதிகரிப்பு இதனிடையே இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,658 பேர்.