தென் ஆப்ரிக்காவில் 34 வயது ஆண் கொரில்லா ஒன்று உடல்நிலை பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததால் அதற்கு சி.டி ஸ்கான் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்வதற்காக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர்.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் விலங்கியல் பூங்காவில் 34 வயது ஆண் கொரில்லா ஒன்று உள்ளது. மகோகோ என்ற பெயர் கொண்ட இந்த கொரில்லா நீண்ட நாட்களாக தும்மல், சளியால் அவதிப்பட்டு வந்தது.
விலங்கியல் பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை. இதனால் 64 கி.மீ தூரத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். இங்கு கொரில்லாவின் எடையை தாங்கக்கூடிய அளவிற்கு சி.டி.ஸ்கேன் கருவி உள்ளது.
ஏற்கனவே உடல் நலம் குன்றியிருப்பதால் அவற்றை சாலை வழியே அழைத்து செல்லும் நேரம் வரை மயக்க நிலையில் வைத்திருப்பது ஆபத்தை உண்டாக்கும். இதற்காக ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து, 210 கிலோ எடை கொண்ட மகோகோ கொரில்லாவை அதில் ஏற்றி விரைவாக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அலர்ஜி காரணமாக மூக்கினுள் நிறைய கட்டிகள் வளர்ந்திருந்ததை கண்டறிந்தனர். அவை கேன்சர் கட்டிகள் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் விலங்கியல் பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர். ஜூலை 9-ம் திகதி அதன் 35-வது பிறந்த நாளுக்கு முன்பு அதற்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளனர்.