பிரித்தானியாவில் டிசம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல்

Britain
Britain

பிரித்தானியாவில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், புதிய தேர்தல் அறிவிப்பு பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வெற்றியாகக் கருதப்படுகிறது. என்றாலும், டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதை நாடாளுமன்ற மேலவை உறுதி செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் அது சட்டவடிவமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சி ஆகியவை டிசம்பர் 9ஆம் திகதி பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை ஒருமைப்படுத்தவும், பிரெக்சிட் உடன்பாட்டை மேற்கொள்வதற்கும் உரிய தருணம் இது என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.