சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷுவை சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டுக்கிளிகள் ஏராளமான பயிர்களை தின்று விவசாய நிலங்களை பாலைவனமாக்கிவிட்டு சென்றுள்ளது. சோளம், பீன்ஸ் மட்டுமல்லாமல் புற்களை கூட விட்டு வைக்காமல் வெட்டுக்கிளிகள் அழித்துள்ளது.
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த உதவ வேண்டுமென சோமாலிய விவசாயிகள் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வெட்டுக்கிளிகள் தொடர்ந்து விவசாய நிலங்களை பாலைவனமாக்கிவிட்டு போய்விடுகின்றன.
2019ஆம் ஆண்டின் இறுதி முதல் செங்கடல் பகுதி, சோமாலியா உள்பட கிழக்கு ஆபிரிக்க நாடுகளை வெட்டுக்கிளிகள் சூறையாடி வருகின்றன. ஏற்கனவே வறுமையும், பசியும் அதிகமான சோமாலியாவில், வேளாண் விளைபொருட்களை வெட்டுக்கிளிகள் அழிப்பது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய உரங்கள், வெட்டுக்கிளிகள் தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வராததால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. இதனால் வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பயிர்களை சீரழித்து வருகின்றன.