மகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த கூட்டமைப்பின் சரவணபவன்!

Ul veedu
Ul veedu

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு தொகை மாம்பழங்களை அன்பளிப்பு செய்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஈ.சரவணபவன்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஊடகப் பிரதானிகள், ஆசிரியர்களை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்களின் உரிமையாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான ஈ.சரவணபவனின் ஊடக ஆசிரியர்  பங்கேற்றிருந்தார்.

சந்திப்பின் இடையே, தனது ஆசிரியர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தின் கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் நிறைந்த கூடையை அன்பளிப்புச் செய்தார்.

அவருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த, “உங்கள் முதலாளிக்கும் நன்றி”, என்று கூறினார்.

இதையடுத்து, அங்கிருந்த ஊடகப் பிரதானி ஒருவர், “வித்திக்கு லீட் கிடைத்து விட்டது”, என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, “இந்த மாம்பழத்துக்குப் பின்னால் வேறு ஏதும் கோரிக்கைகள் வரலாம்”, என்று வித்தியாதரன் நக்கலாகக் கூறினார்.

ஊடக ஆசிரியர்களின் நகைச்சுவைகளுக்கு மத்தியில் பிரதமர் மகிந்தவின் உதவியாளர் மாம்பழத்தை வெட்டிக் கொடுக்க அங்கேயே ருசி பார்த்தாராம் பிரதமர் மகிந்த.

தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறோம் என்பவர்கள், கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்களைக் கொன்றழிக்கக் கட்டளையிட்டவருக்கு – இன்றும் தமிழர்களுக்கு உரிமைகளை – அதிகாரங்களை தர மறுப்பவருக்கு மாம்பழம் – அதுவும் யாழ்ப்பாணத்தின் கறுத்தக் கொழும்பானை – கொடுத்து ருசிக்க வைக்கிறார்கள்.

முன்னர், நாளிதழைக் காட்டி ஆசனம் பறித்தவர் – பின்னர், அரசியலையும் – நாளிதழையும் காட்டி வரிவிலக்குப் பெற முனைந்தார். இப்போது, மாம்பழத்தின் பின்னால் தனக்கு எதைக் கேட்டுப்பெற விரும்புகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்…!