இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு சந்தித்துப் பேசினர் என்பது பழைய கதை. ஆனால், இந்தத் திடீர் சந்திப்பின் பின்னணி இப்போதுதான் அவிழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் முக்கிய மருத்துவர்கள் நால்வரின் முயற்சியாலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் இந்த சந்திப்பின் சூத்திரதாரி சுமந்திரன்தான் என்கின்றன நம்பிக்கையான தரப்புக்கள்.
தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவின் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் மாவை சேனாதிராசாவை சமரசம் செய்வதே சுமந்திரன் தரப்பின் நோக்கம். இதனால்தான் சுமந்திரன் தனக்கு மிக நெருக்கமான மருத்துவர் ஒருவர் மூலம் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதியையும் சம்மதிக்க வைத்து இரகசிய சந்திப்பு என்ற தூது நாடகத்தை நடத்தியுள்ளார்.
திருகோணமலையில் இன்று நடக்கும் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மாவை சேனாதிராசாவும் அவர் சார்ந்தவர்களும் சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையாக நடந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர்களை சமரசப்படுத்தும் வேலையை தாமே செய்யாமல் தன் மீது இருக்கும் கோபம் அனைத்தையும் முன்னதாகவே தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை அவர் மாவை சேனாதிராசாவுக்கு சுமந்திரன் வழங்கியுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் இன்றைய அரசியல் குழுவின் கூட்டத்தில் சூடான வாதப் பிரதிவாதங்களை மாவை சேனாதிராசா கிளப்புவாரோ இல்லையோ கட்சியின் மூத்த தலைவர்கள் – முக்கியமாக மாவையின் ஆதரவு பேர்வழிகள் கிளப்புவார்கள் என்றே தோன்றுகிறது.
இதனையும் சரி செய்யத்தான் கட்சியின் பொதுச் செயலாளர் தமக்கு சம்பந்தமில்லாத விடயங்கள் சிலவற்றையும் தன்னில் பொறுத்து சுமந்திரனின் தலையைக் காப்பாற்றியுள்ளார். முக்கியமாக கலையரசனுக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்ட விவகாரத்தில்.
எனினும் இந்த சந்திப்பில் சுமந்திரன் பெரும் வெடி ஒன்றை கொளுத்திப் போடுவார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், அது என்ன? எத்தகைய தாக்கமானது என்பதை அவர்கள் கூற மறுத்துவிட்டனர். அவர்களின் கூற்று உண்மையாக இருக்குமா? என்பது இன்றிரவு தெரியவரும்!