இழுவை வலைப்படகு உரிமையாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

IMG 0162
IMG 0162

ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே உள்ளூர் இழுவை வலை படகுகள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தில் இன்று(05.11.2021) இடம்பெற்ற பிரதேச கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குருநகர் பிரதேசத்தில் சுமார் 400 உள்ளூர் இழுவைப் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சார்ந்த ஒரு பிரிவினர், உள்ளூர் இழுவைப் படகுகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து வருவதுடன் கடற்றொழில் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், குருநகர் பிரதேச கடற்றொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் கடல் வளத்தை அழிக்கின்ற அடிமட்ட இழுவை வலைப் படகுகளை எந்தக் காரணத்திற்காகவும் அனுமதிக்க முடியாது எனவும், தற்போது இழுவை வலைப் படகுகளை பயன்படுத்துகின்ற உள்ளூர் கடற்றொழிலாளர்கள், கடலின் அடித்தளத்தினை பாதிக்காத வகையில் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் தொழிலில் ஈடுபட முடியுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.