பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் – மகேசன்

20210507 121421
20210507 121421

யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால் பொதுமக்கள் அவதானாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…..

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்று அதிகரித்த நிலை காணப்படுகின்றது. நேற்றைய தினம் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் 1688 நபர்கள் யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். 21 மரணங்கள் யாழ் குடாநாட்டில் பதிவாகியுள்ளன.

இதனை விட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த 2261 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகின்றது.

அதேவேளையில் யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களிற்கு தடை விதித்தும் இருக்கின்றோம். அரசினுடைய சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்கள் சுகாதார வழி காட்டல்கள் தடைகளுக்கு இணங்க செயற்படுத்தியுள்ளோம்.

தற்போது காவல்துறையினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

இந்த நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால் இந்த அபாயகரமான காலகட்டநிலைமை நாடு முழுவதும் காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி தமது செயல்களை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.