அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் ஆளும் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் உருவாகியுள்ளன எனத் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஆளுந் தரப்பு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் நாளுக்கு நாள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மீது ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன், ஆளும் கட்சி கூட்டத்திலும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அரசில் இருந்து கொண்டே முரண்பாடான கருத்துகளை முன்வைப்பது, அரச விரோத தீர்மானங்களை முன்னெடுப்பதன் மூலமாக மக்கள் மத்தியில் தவறான எண்ணப்பாட்டை உருவாக்கவும் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ விடயத்தில் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு தவறானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.