அரசின் பங்காளிகள் நாடகம் அரங்கேற்றும் கோமாளிகள்! – வேலுகுமார்

எம்.பி 324x160 1
எம்.பி 324x160 1


அரசின் பங்காளிகள் நாடகம் அரங்கேற்றும் கோமாளிகள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டிலுள்ள ஒரு பிடி மண்ணையேனும் வெளிநாட்டுக்கு தாரை வார்க்க மாட்டோம் எனவும், விற்கப்பட்டுள்ள தேசிய வளங்கள் மீள பெறப்படும் எனவும் ராஜபக்‌ஷக்களும், அவர்களின் சகாக்களும் தேர்தல் காலங்களில் சூளுரைத்தனர். மறுபுறத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பங்காளிகளை களமிறக்கி சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இனவாதம் விதைக்கப்பட்டது. இதற்கு சிங்கள தேசியவாத அமைப்புகளும் துணைநின்றன.

ஆனால், இன்று என்ன நடக்கின்றது? தேசிய வளங்கள் விற்கப்பட்டுவருகின்றன. மேலும் பல இடங்கள் விற்கப்படவுள்ளன. வெளிநாட்டு முதலீடு என்ற போர்வையிலேயே இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மக்களைத் திசைதிருப்பி அரசைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பங்காளிக் கட்சிகள் வழமையான பாணியில் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

தேசப்பற்றாளர்கள்போல் தம்மை காண்பித்துக்கொள்வதற்காக கோமாளி கூத்தாடுகின்றனர். இவர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது என்றார்.