மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துக! – ரணிலுக்கு இந்தியா அழுத்தம்!

Modi Ranil
Modi Ranil

இலங்கையில் பல வருடங்களாகக் கிடப்பில் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2017 இல் மாகாண சபைகளின் ஆயுட் காலம் முடிந்ததில் இருந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. அப்போது இருந்த மைத்திரி – ரணில் அரசும் சரி, அதன் பின் உருவான கோட்டாபய அரசும் சரி அந்தத் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2017 இல் இது தொடர்பில் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அதை நிறைவேற்றுவதற்கு அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேவேளை, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலமும் நிறைவடைந்துள்ளது. அந்தத் தேர்தலை நடத்துவதற்குக்கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசின் கவனமோ ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில்தான். அதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செய்து வருகின்றார். இந்தநிலையில்தான் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது என்று அறியமுடிகின்றது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று ஒரு வருடமாகின்றது. ஆனால், அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லி சென்று சந்திப்பதற்கு இந்திய மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதற்குக் காரணம் மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தாமல் இருப்பதே என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. – என்று கொழும்பு ஊடகத்தின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.