கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளை இதுவரை வெளிப்படுத்தாதவர்கள் சமூகத்தில் நடமாடக்கூடும் என இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆனால் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் சமூகத்தில் நடமாடக்கூடும் என்பது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நோய் பரவும் ஆபத்து அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என மக்கள் கருதக்கூடாது எனவும் மேல்மாகாணத்தில் கொரோனா பரவும் ஆபத்து தொடர்ந்தும் நீடிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறிகள் இல்லாததால் உங்களுக்கு வைரஸ் இருப்பது உங்களுக்கே தெரியாமலிருக்கலாம்,அதேபோன்று உங்களிற்கு தெரிந்த ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இல்லாததால் அவருக்கு கொரோனா இருப்பது உங்களிற்கு தெரியாமலிருக்கலாம் என சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் நீங்கள் வெளியில் செல்வதை உறுதி செய்யுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.