அம்பாறை மாவட்டத்தில் மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நினைவேந்தலை தனது வீட்டில் அனுஷ்டித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திருக்கோவில் காவல்துறையினர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட ஐவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைத் தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும் சட்டத்துக்குப் புறம்பானதாகும் என அரசு வெளியிட்டது.
மாவீரர் நாள் என்பது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.