ஸ்ரீலங்காவில் அரச வங்கிகளை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். இதற்காக ரணில் அரசாங்கம் அனைத்துவித வரைபுகளையும் நிறைவுபடுத்தியிருப்பதால் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கோட்டாபய இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கின்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிடுகையில்,
இந்த அரசாங்கம் தொழிற்சங்கங்களை எவ்வாறு நடத்துகின்றது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த நாட்டில் 30 வருட யுத்தமொன்றை இல்லாதொழித்து கொண்டுவரப்பட்ட வெற்றியை முழுமையாக அப்புறப்படுத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
துறைமுகம், விமான நிலையம் என்பவற்றை விற்பனை செய்தார்கள். கிழக்கில் துறைமுகத்தை விற்பனை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 2005ஆம் ஆண்டு இந்த நாட்டில் 7 இலட்சம் அரச பணியாளர்கள் இருந்தார்கள். நாம் ஆட்சியில் இருந்து செல்கையில் அதன் தொகை இரு மடங்கானது.
எனினும் இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது? வங்கிகளை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு சட்டமூலத்தை கொண்டுவந்து அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு அதனை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பும், கடமையுமாகும் என்பதை வலியுறுத்துகின்றேன். இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குரலுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் முதலாளிமார் சம்மேளனமும், அரசாங்கமும் செவிசாய்ப்பதாக இல்லை. அவர்களுக்கான சரியான கொடுப்பனவை நாம் பெற்றுக்கொடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.