எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படமாட்டாது!

1 Podujan
1 Podujan

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கைது உட்பட பல்வேறு விசாரணைகளிலும், நீதிமன்ற செயற்பாடுகளிலும் அரச உயர்பீடத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“கடந்த 05 வருடங்களாக துன்புறுத்தல்களையே அவர்கள் செய்தார்கள். அவர்கள்தான் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளை அலரிமாளிகைக்கு அழைத்து, ஒவ்வொரு வாரமும் ராஜபக்சவினரை விசாரணைக்கு அழைக்குமாறும், விளக்கமறியலில் வைக்குமாறும் வழக்கு இல்லாவிட்டால் உருவாக்கிக் கொடுக்கும்படியும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரலும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான திணைக்களத்தின் முன்னாள் பிரதானியுமான சுஹத கம்லத் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தற்போது இளைஞர்கள் இணைந்து நாட்டை அழகுபடுத்த தொடங்கியிருக்கின்றனர். அரசாங்கம் மீது நம்பிக்கை இருப்பதாக அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்” என கூறியுள்ளார்.