பாதுகாப்பு படையினரால் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் பயிற்சி நெறி!

08 2
08 2

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு இடம்பெற்ற பயிற்சியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், சாந்தி சமூக நலன் அமைப்பின் அனுசரணையுடன் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்துவதற்காகவும், கல்வி மட்டம் குறைந்த மாணவர்களின் கல்வியை மேலும் மேம்படுத்தும் பொருட்டும், மாணவர்களின் உளவியல் அறிவூட்டலுக்காகவும் இத்திட்டம் செயற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் வழி நடத்தலில் இக்கல்வி வலயத்தில் நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கன்னங்குடா மகா வித்தியாலயம், இருட்டுச்சோலைமடு ஆகிய மூன்று பாடசாலைகளில் இருந்து 150 மாணவர்களுடன், பாட ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டு 3 நாள் கொண்ட பயிற்சி நடாத்தப்பட்டது.

இதன்போது சாந்தி சமூக நலன் அமைப்பினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் ஐவருக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேவா வித்தாரன, 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் மிஹிந்து பெரேரா, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் மற்றும் கிழக்கு பல்கலைகழக உபவேந்தர், இத்தாலி நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சாந்தி சமூக நலன் அமைப்பின் பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.