பிரபாகரனைப் போன்று மீண்டும் ஒரு போரை தொடுக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை

7 h
7 h

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் போன்று மீண்டும் ஒரு போரை தொடுக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை.

எனவே, தேசிய கீத விவகாரத்தை பிரிவினைவாதத்துக்குப் பயன்படுத்தும் நோக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கைவிட வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. மொழிப் பயன்பாடு குறித்து இந்தியாவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது சிறந்தது என்று அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார் .

‘ இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொள்ளாமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதும், அதனைப் புறக்கணிக்கத் தீர்மானிப்பதும் அவரவர் உரிமையாகும். எனினும், நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கு அவர்களால் கூறப்படும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மொழி என்பது தொடர்பாடலுக்கான ஒரு மூலம் மாத்திரமேயாகும். எனவே, இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடப்படாமையை மொழியை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாக மாற்ற எத்தனிக்கக்கூடாது.

பிரபாகரனைப் போன்று போரில் ஈடுபடக் கூடிய சூழல் தற்போது இல்லை என்பதைச் சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டு மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளில் இணைந்து கொள்வது பற்றியே அவர்கள் தற்போது சிந்திக்க வேண்டும்.

அதனை விடுத்து தமிழ் மொழி புறக்கணிப்பு, சிங்கள மொழிக்கு முதலிடம் எனக் கூறிக் கொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவது அநாவசியமானதாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.